0

காவிரி ஆறு யார் சொத்து ?

தேசிய இனங்களை மொத்தமாக மூட்டையாகக் கட்டி அந்தப் பொட்டலத்திற்கு ஒரு பெயரை வைத்து அனைவரையும் ஒரு சட்டதிட்டங்களுக்குள் அடக்க நினைப்பது சரியான நாகரீக வளர்ச்சி இல்லை, பொதுவாக இருக்கும் விடயங்களுக்குப் பொதுத் திட்டங்களை இயற்றுவதும், அப்படி இல்லாத இடங்களில் வளைந்து கொடுப்பதும் தான் சிறந்த அரசியல் முறையாக இருக்க முடியும்.

“அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்” இந்தத் தமிழ்ப் பழமொழிக்கேற்ப இந்திய அரசியல் என்பது நாகரீக வளர்ச்சியை நோக்கிப் பீடுநடைப் போட முடியாமல் சிக்கித் தவிக்கிறது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆட்சிமுறை எல்லாத் தேசிய இனங்களின் விழுமியங்களையும் சுவீகரித்துக் கொள்ளாமல் ஒரு சில இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைய இந்திய அரசியலமைப்பை வேறொன்றும் இல்லை மதிப்புக் கூட்டப்பட்ட ஆங்கிலேய ஆட்சியின் பதிப்பு 2.0 (version 2.0 ) என்பதே உண்மையான உண்மை.

மக்களாட்சியின் எந்த ஓர் அமைப்புகளும் தனித்துவமாய்ச் செயல்பட முடியாத அளவிற்கு மக்களை நாளொரு விதம் பொழுதொரு வண்ணம் குற்றவாளிகளாய் மாற்றிக் கொண்டிருக்கிறது. ஏன் மக்களைக் குற்றவாளியாக வேண்டும், இதற்கு மிக எளிதான விளக்கம் என்னவென்றால் மக்களுக்கு அரசியல் புரிதல் ஏற்பட்டுவிட்டால் ஒரு நாடு, ஒரு மொழி என்று பேசுவதோ, பிரச்சாரம் செய்வதோ தான் தேசவிரோதச் செயல் என்பது தெளிவாகப் புரிந்துவிடும். மக்களைக் குற்றவாளி ஆக்கிவிட்டால் தவறு எல்லாம் சரி என்பது போலவும் சரியானவைத் தவறு போலவும் எளிதாக மடைமாற்றி விடலாம் அல்லவா. இன்றைக்குப் பத்துப் பேரை எடுத்துக் கொண்டால் எட்டுப் பேர் ஊழல் எல்லாம் தவறு இல்லை என்று சொல்லும் நிலைக்கு வந்ததை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

என் பாட்டன் காவிரியின் குறுக்கே அணைக் கட்டினான் அந்த அணை இன்றும் பிரம்மாண்டமாக இயங்கிக்
இருக்கிறது. நான் இன்று காவிரியைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். இது தான் நாகரீக நாட்டின் வளர்ச்சியா? ஒண்டவந்த பிடரி ஊர்ப் பிடரியை விரட்டிய கதைக் கேட்டிருப்பீர்கள். இன்றைய அரசியல் சூழலில் தனித்துவமான எனது இனம் அதன் நீர்,நிலம்,காற்று என்று எதையும் பாதுகாக்க முடியவில்லை. சரிசம உரிமையைக் கொடு இல்லை என்றால் எங்களை அடிமையாக வாழச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.

#நதிநீர்_உரிமை_காப்போம்
#மாநில_உரிமை_மீட்போம்
#காவேரிஆணையம்காப்போம்
#SaveCauveryAuthority

Reader Circle

Join the TamilanSankar Reader Circle

Get new essays, poems, story chapters, selected audio updates, and important reader notes in one clean place.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!