
நமது வரலாறுகள் அனைத்துமே போர்களில் வெற்றி பெற்றவர்களால் அல்லது அடக்கி ஆளப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்துகொண்டிருந்த ரோமானியர்களின் எச்சங்களாக இத்தாலி நாடு இன்றும் உள்ளது. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்து கொண்டிருந்த சீனர்கள், சீனா என்ற நாடக அமெரிக்காவிற்குச் சவால் விடும் அளவிற்கு இணையாக, இன்று இன்னொரு உலக வல்லாதிக்க சக்தியாக மாறி இருக்கின்றனர். தமிழர்கள் நாமோ அடிமையிலும் மிகச் சிறந்த அடிமைகளாய், நாம் அடிமைகளாய் இருக்கிறோம் என்கின்ற உணர்வு கூட இல்லாமல் நம்மை அடித்தால் கூடக் கேட்க நாதியற்று, இலக்கின்றி எதையோ நோக்கி, நம் அடையாளங்களை நமக்கே தெரியாமல் தொலைத்துக் கொண்டே, நடமாடும் யந்திரங்களாய் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
சோழ ஏரி எப்படி வங்காள விரிகுடா ஆனது, காலப்போக்கில் பெயரழிந்ததா இல்லை திட்டமிட்ட வகையில் பெயர் மறைக்கப்பட்டதா என்கின்ற ஆராய்ச்சி இல்லை இந்தப் பதிவு, ஊர் ஊரிற்குத் தமிழ் தமிழ் என்று மார்தட்டி வீரவசனம் பேசிக் கொண்டே தமிழருக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கும் இந்துத்துவவாதிகளுக்கும், திராவிடம் என்று தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், தமிழர்களாய் இருந்து கொண்டு இந்துத்துவவாதிகளுக்கும் திராவிடர்களுக்கும் காவடி தூக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்குமான கேள்வி.

தமிழர்கள் என்றுமே மாற்று மொழி பேசுபவர்களை எதிரிகளாகவோ துரோகிகளாகவோ பார்த்தது இல்லை ஆனால் கொடுமை என்ன வென்றால் தமிழ் பேசும் அனைத்து மாற்று மொழியினரும் தமிழர்களை உருத்தெரியாமல் அழிக்க வேண்டும் என்று சபதம் ஏற்றுச் செயற்படுவதைத் தெளிவாகக் காணமுடிகிறது. ஓர் அசல் தமிழன் இன்று 365° பாகையிலும் எதிரிகளாலும் துரோகிகளாலும் சூழப்பட்டுள்ளான்.
“யாதும் ஊரே யாவாறும் கேளீர்” என்கின்ற தமிழனின் சொல்லாடல் தமிழனின் தாராள மனதைக் காட்டுகிறது ஆனால் அந்தச் சொல்லாடலே தமிழனின் வீழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழன் இன்று பொருளாதாரம் ,அரசியல்,கலை,இலக்கியம் என்று எல்லாவற்றிலும் இரண்டாந்தாரக்குடிமகனாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான். தமிழனின் அடையாளங்கள் களவாடப்பட்டு அவனிடமே விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அடிமை என்று தெரியாத தமிழனும் அவைகளை வாங்கிப் பெருமைபட்டுக் கொண்டிருக்கின்றான்.
சோழர்கள் கடலாடிய சோழ ஏரி வரலாற்றுப் பக்கங்களில் இருந்திருக்கிறது ஆனால் இன்று காணாமல் செய்யப்பட்டிருக்கிறது… தமிழ் எங்கள் உயிர் என்றவர்களும், நாங்கள் தமிழின காவலர்கள் என்று தம்பட்டம் அடித்துத் தமிழர்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரங்களில் உட்கார்ந்தவர்கள் ஏன் செவிடாகிவிட்டனர்.
தமிழா உன் மூத்தோன் செய்ததைக் கூட நீ செய்யவேண்டாம்… உன் அடையாத்தை காப்பாற்று!
Reader Circle
Join the TamilanSankar Reader CircleGet new essays, poems, story chapters, selected audio updates, and important reader notes in one clean place.



