தியாகத் தீபம் திலீபன்
முப்பெரும் விழா என்று எல்லாம் உங்கள் காதுகளில் இது நாள் வரை திணிக்கப்பட்டிருக்கும், அதையெல்லாம் தூக்கியெறியுங்கள், நாம் மகிழ்வதற்கு நினைவு கூர்வதற்குமான வாரம் இந்த வாரம்.
1987 செப்டம்பர் மாதம் 15ந்தாவது நாள் ஆயுதம் தூக்கிவிட்டனர், தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்று போலி பிரச்சாரப் பீரங்கிகளாய் அரசாங்கங்கள் குதித்த போது, மகாத்மா என்று உலகத்தார் பட்டம் கொடுத்த அவருக்கே முன்னுதாரணமாக உண்ணாவிரதம் என்றால் என்ன அந்தப் போராட்டத்தின் முடிவு என்ன என்று உலகிற்குப் பாடம் நடத்தியவர் தியாகத் தீபம் திலீபன். அன்று மட்டும் இது போன்று சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் காந்திதேசம் திலீபனை கண்டும் காணாமல் போயிருக்காது. அறத்தால் சீரிய திலீபன் உலகத் தமிழர்களுக்கு வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார், அமைதி வழி போராட்டங்களை மக்களாட்சி அரசாங்கங்கள் எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு அவரின் மரணமே சாட்சி. பன்னிரண்டு நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உயிர்விட்ட அவரது ஐந்து அம்ச கோரிக்கைகள் இவைகள் தான்.
- மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
- சிறைச்சாலையிலும் தடுப்பு முகமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்
- அவசர காலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்
- ஊர்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும்
- தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாகக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும்

அன்று அவர் உயிர் பிரிந்த நாளில் இருந்து இன்று ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளில் ஏதாவது மாற்றம் நடந்திருக்கிறதா… அமைதி வழியோ, ஆயுத வழியோ தமிழன் என்று வந்துவிட்டால் நீதி மட்டும் கிடைப்பதில்லை… உலகத் தமிழர்களே இதை உணருங்கள்!
தமிழ்த்தேசிய பேரறிஞர் குணா

“திராவிடத்தால் விழுந்தோம்” இந்தச் சொல் ஈழத்தின் இனஅழிவிற்குப் பிறகு உலகத் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்து வருகிறது, இவர் காட்டிய வழியில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் கிளம்பி இருக்கின்றன. தமிழ்த்தேசிய பேரறிஞர் ஐயாகுணா அவர்களின் இனிய பிறந்தநாள் செப்டம்பர் 15 தான், திராவிடத்தால் விழுந்த தமிழனின் முதுகெலும்பை நிமிர்த்தி உயர்த்திய தமிழ்த்தேசிய பேரறிஞர் அவர், உலகெங்கும் வாழும் தமிழர்கள் நிச்சயம் அவர் எழுதிய “திராவிடத்தால் விழுந்தோம்” என்கின்ற சிறிய கட்டுரையைப் படிக்க வேண்டும். இதுவரை படிக்காதவர்கள் தேடி பிடித்தாவது படியுங்கள். இந்த உலகில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளில் கூட ஆழ்ந்த விடயங்கள் பொதிந்து இருக்கும், தெற்காசியாவை ஆண்ட தமிழனுக்கு இன்று உலகில் ஒரு நாடு கூட இல்லை ஏன் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படித் தமிழன் பல நாடுகளில் பொருளாதாரத்தில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அடர்த்தியாய் வாழும் நாடுகளில் அவன் நிலை என்ன? ஏன் அவன் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. மக்களாட்சி பேசப்படும் நாடுகளில் அவன் ஏன் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் மாற்றானுக்குக் குடை பிடித்துக் கொண்டிருக்கிறான் என்கின்ற பல கேள்விகளுக்கு விடை தமிழ்த்தேசிய பேரறிஞர் ஐயாகுணா அவர்களின் “திராவிடத்தால் விழுந்தோம்” என்கின்ற புத்தகம் தான். இந்த மெல்லிய சிறு புத்தகம் தான் எழுவது ஆண்டுத் திராவிடத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஐயா அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். அவர் காட்டிய வழியில் தமிழர் நலன் சார்ந்த அரசியலை முன்னோடுப்போம் என்று உறுதியெடுப்போம்.
மீண்டும் சந்திப்போம்…
Reader Circle
Join the TamilanSankar Reader CircleGet new essays, poems, story chapters, selected audio updates, and important reader notes in one clean place.



