அடுத்த நாள் காலை, கனவின் கலைந்தாலும் அதன் நினைவு இன்னும் கண்களில் ஒட்டியவாறே ஈமரன் விழித்தான். மண்ணை பிளந்து எழும் நெருப்பு கோடுகள், கருங்கல் தூணின் ஒளி, இருளிலிருந்து எழுந்த அசுர வடிவங்கள்—அனைத்தும் அவன் நினைவில் சிதறிநின்றது. மூச்சை உள்ளிழுக்கும் போது கூட மார்புக்குள் ஏதோ இறுக்கமாக இருந்தது; அந்தக் கனவு தூக்கத்தோடு முடிந்ததில்லை, விழிப்பிற்குள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
வீட்டை விட்டு வெளியே வந்தான். காற்றில் மண் வாசமும், காலை நேர சத்தங்களும் கலந்திருந்தன. அரவான் கிராமம் வழக்கம் போலவே எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தது. பெண்கள் தலையில் கூடை வைத்துக் கொண்டு கிணற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்; சிறுவர் சிறுமிகள் குச்சிகளைச் சுழற்றிக் கொண்டு ஓடி விளையாடினர்; வயது வந்த பெரியோர்கள் சூரிய வெப்பத்தில் அமர்ந்து இன்றைய வானிலை பற்றி வாதிட்டுக் கொண்டிருந்தனர். உலகம் வழக்கமான ஓட்டத்தில் நகர்ந்தது. எந்த அச்சமும் இல்லை. மாறுதலை அறிவிக்கும் எந்த முன்னறிவிப்பும் இல்லை.
ஆனால் உலகம் மாறி கொண்டிருக்கிறது என்பதை ஈமரன் மட்டும் தெரிந்துகொண்டிருந்தான்.

அவன் கையோடு மார்பைத் தடவினான். குமரிக்குன்றத்தில் கருங்கல் தொட்டதிலிருந்து உணர்ந்த அந்த வெப்பம்— இன்னும் இருந்தது. இல்லை; இன்று அது இன்னும் அதிகமாகவே இருந்தது.
“ஈமரா.”
பின்னால் கேட்ட குரல் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
முதலில் பார்ப்பதற்கு ஒரு வழிப்போக்கனைப் போலத் தோன்றினான். மங்கலான பச்சை மேலங்கி எங்கும் புழுதியாய் இருந்தன தலைப்பாகையில் மறைந்த முகம்—சாதாரண யாத்ரீகரைப் போலவே இருந்தான். ஆனால் அவன் நிற்கும் விதம், கண்கள் சுற்றத்தை அளவிட்டுப் பார்க்கும் தீவிரம், உடல்நிலை—இவையாவும் அவனை வழக்கமான பயணிகளிடமிருந்து வேறுபடுத்தின.
“நீ தான் அரவான் கிராமத்து ஈமரன் இல்லையா?” என்று அவன் கேட்ட குரலில் சந்தேகம் இல்லை; உறுதி மட்டுமே.
ஈமரன் சிறிது பதறினான். “ஆம்… நான் தான். ஆனால் நீங்கள் யார்?”
அந்நியன் தான் அணிந்திருந்த தலைப்பாகையை சற்று பின்னோக்கி தள்ளினான், இப்பொழுது அவன் முகம் சற்று தெளிவாக தெரிந்தது.
அவன் முடி வெண்மையாக இருக்கவில்லை; நிலவொளி போல வெள்ளி நிறமாக இருந்தது. கண்கள் இளஞ்சாம்பல், ஆனால் அசாதாரண தெளிவுடன் இருந்தது; இப்போது ஈமரனைப் பார்த்தாலும், அதன் பின்னால் ஓர் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதுபோல. முகத்தில் தீர்க்கமாக சில கோடுகள் இருந்தாலும், அவை முதுமை காரணமாக அல்ல என்பது தெரிந்தது; நீண்ட காலமாக பல விடயங்களை ஆய்ந்து அறிந்ததே அதற்கு காரணமாக தெரிந்தது.
“என் பெயர் ஆதிரன்,” என்று அவன் மெதுவாகச் சொன்னான். “குமரிக்குன்றத்தின் கருங்கல்… விழித்தது என்பதற்காகவே இங்கே வந்திருக்கிறேன்.”
ஈமரனின் இதயதில் இடி தாக்கியது போல் இருந்தது.
அந்த விடயத்தை அவன் யாருக்கும் யாருக்கும் சொல்லவில்லை. அவன் அம்மாவுக்கு கூட அதை தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கையில், ஒரு அந்நியன் அதை எப்படித் தெரிந்து கொண்டான்?
அவன் குரலை அமைதியாக வைத்துக் கொள்ள முயன்றான். “கிராமத்துக்கு வரும் யாத்ரீகர்கள் எல்லாம் குமரிக்குன்றத்தையும், அதிலிருக்கும் கருங்கல் தூணைப் பற்றி கதைகள் சொல்லுவார்கள். நீங்களும் அப்படிப் தானே கேட்டீர்கள் .”
ஆதிரன் தலையசைத்தான். “கேட்கவில்லை ஈமரா. உணர்ந்தேன். இந்த உலகின் பாதி ஆத்மாக்கள் அதை உணர்ந்திருக்கும். பழங்கால கருங்கல் தூண் உண்மையாக விழித்தால், அது கிசுகிசுப்பதில்லை; அது உலகெங்கும் ஓர் அழைப்பை அனுப்பும்.”
அவனது பார்வை கூர்மையடைந்தது.
“அந்த அழைப்பு… அது தேர்ந்தெடுக்கும் ஒருவரிடம் நிச்சயம் சேரும்.”
ஈமரனின் தொண்டையில் உலர்வு. “என்னை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை…”
ஆதிரன் ஒரு சோர்வான புன்னகை புனைந்தான். “யாரும் தேர்ந்தெடுக்கவில்லை என்று உன் வாய் மட்டுமே சொல்ல முடியும்…”
கிராமத்தின் வெளிப்புற வயல்களுக்குத் தூரமாக நடந்தார்கள்; அங்கிருந்தால் யாரும் கேட்க வாய்ப்பில்லை. ஈமரனுக்கு அவனிடம் இருந்து ஏதோ ஒரு அதிர்வு உணரப்பட்டது.
“இந்தக் கருங்கல் தூணைப் பற்றி எப்படித் தெரிந்துகொண்டீர்கள்?” என்று ஈமரன் கேட்டான்.
“பழங்கால இடங்களைக் தெளிவுற கற்கிறவன் நான்,” என்று ஆதிரன் பதிலளித்தான். “வீழ்ந்த கோட்டைகள், மறைந்த அடுக்குகள், உறங்கிக் கிடக்கும் மந்திரக் கோடுகள்—பல ஆண்டுகளாக அவற்றைத் தேடி நடக்கிறேன். பெரும்பாலான கற்கள் இன்று தன் நிலை மறந்து நினை தூணாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்தக் கருங்கல் தூண்…” அவன் வானத்தைப் பார்த்தான். “இது மீண்டும் விழிக்கக் கூடாது என்பதே பழைய வாக்கு.”
அந்த வார்த்தை வெளிப்பட்டதும், ஈமரனின் மார்பில் இருந்த வெப்பம் சற்று துடித்தது.
ஆதிரனின் கண்கள் சிறிது ஒளிர்ந்தன. “நீயோ அந்தக் கல்லைத் தொட்டுப் பார்த்திருக்கிறாய்.”
ஈமரன் மூச்சை இழுத்துக் கொண்டான். “உங்களுக்கு எப்படி—?”
“அந்தக் கல் தொட்டவர்களின் மீது முத்திரை பாய்ச்சி விடும்,” என்று அவன் மெதுவாகச் சொன்னான். “உன் மார்பில் ஏதோ வெப்பம் இருப்பதுபோலத்தானே தோன்றுகிறது? எப்போதும் இருக்கிறதா?”
ஈமரன் தன்னிலை இழந்தான். காலை வெளிச்சம் நல்லதாயிருந்தாலும், மிதமான வெப்பம் இருந்தாலும் அவனுக்கு குளிர ஆரம்பித்தது.
இதை அவன் விரும்பவில்லை. தேவைப்படவில்லை. ஆதிரன் இப்படி அவனைப் பார்த்து பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை.
ஆதிரனின் குரல் மென்மையடைந்தது. “இது சாபம் கிடையாது, ஈமரா. இது அழைப்பு.”
“எதற்காக?” ஈமரன் உடைந்து கேட்டான். “கனவுகளால் துன்பப்படும் வாழ்க்கைக்கா? வானத்தில் ஏதோதோ காட்சிகளை பார்க்கிற வாழ்க்கைக்கா? ஒவ்வொரு நாளும் பயத்தோடு விழிக்கிற வாழ்க்கைக்கா?”
ஆதிரன் அவனை பொறுமையுடன் பார்த்தான். “இந்த மெய்யர்களுக்கும் நிழலாருக்கும் இடையில் நிற்கப் போகிறவன் ஒருவன் வேண்டும். ஒருகாலத்தில் அண்டவெளிக் காவலர்கள் அதைச் செய்தவர்கள். நூற்றாண்டுகளாக அவர்கள் உறங்கிக் கிடக்கிறார்கள். யாரவது அவர்களை எழுப்ப வேண்டும்.”
ஈமரன் தலைஅசைத்தான். “அது நான் இல்லை. நான் ஒரு சாதாரண கிராமத்தில் வாழும் சிறுவன். போர்வீரன் இல்லை. என்னிடம் எந்த ஒரு சக்தியும் இல்லை.”
“ஆனால் கருங்கல் தூண் அதற்கு எதிராகவே சொல்கிறதே ,” என்று ஆதிரன் அமைதியாகச் சொன்னான்.
அந்தசமயம், காற்று வயல்களின் மீது வேகமாக வீசியது; பச்சை நெற்கதிர்கள் வேகமாக அசைந்தன. ஈமரன் தன்னிசையாக வடக்கின்பக்கம் திரும்பி பார்த்தான். குமரிக்குன்றத்துக்கு அப்பால் உயர்ந்து நிற்கும் மலைச்சரிவுகளின் மேல் வானம் இன்று சிறிது சாம்பல் நிறத்தில் இருந்தது.
ஆதிரனும் அந்த திசையை நோக்கி இருந்தான்.
“அதை நீயும் பார்த்தாயா?” என்று கேட்டான். “வடக்கே வானத்தை கிழித்து தெரியும் சிவப்பு நிறம்?”
ஈமரன் தயங்கினான். “ஆமாம் கனவில் பார்த்தேன்… இப்போது நேரிலும் பார்க்கிறேன்.”
“அது கனவு இல்லை,” என்று ஆதிரன் சொன்னான். “உலகத்தின் நூலிழை கிழிய ஆரம்பித்திருக்கும் சின்னம் அது. அந்தத் துளையில் இருந்து… நீண்ட காலமாக உறங்கிய ஏதோ ஒன்று எழுந்துவருகிறது. கொடூர பசிக்கொண்டிருக்கும் ஒன்று.”
ஈமரனை நடுக்கம் பிடித்தது. “இந்த எல்லாவற்றையும் ஏன் என்னிடம் சொல்லுகிறீர்கள்?”
ஆதிரன் கைகளை பின்னால் இணைத்துக் கொண்டான். “ஏனென்றால் நீ இப்பொழுது எந்த பாதுகாப்பிலும் இல்லை. உன் கிராமத்தின் நிலைமை படு மோசம். கருங்கல் முத்திரை போட்டவர்களை நிழலார் எளிதில் உணர்வார்கள். அவர்கள் இந்நேரம் உன்னைத் தேடும் பணியை தொடங்கி இருப்பார்கள்.”
ஈமரன் மனதில் அரவானின் அமைதியான வீடுகள் நினைவில் வந்தன. தனது கனவில் பார்த்த அந்த கருங்கல் தூண்கள் போலவே, இந்தக் கிராமமே ஒருநாள் கல்லாகி விடுமோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது.
“என்னால யாருக்கும் தீங்கு வரக்கூடாது,” என்று அவன் மெதுவாகச் சொன்னான்.
“அப்படியானால், நீ இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று ஆதிரன் சொன்னான்.
அந்த வார்த்தைகள் செவியில் விழுந்த நொடியில், ஈமரன் இதமயமே நொறுங்க ஆரம்பித்தது. அரவானை விட்டு கிளம்புவதா? அதுவும் அம்மாவை விட்டு விட்டா ? அவன் வாழ்நாளெல்லாம் பார்த்த ரசித்த இந்தக் குளிர்நிலத்தை விட்டுப் போவதா?
“என்னால் முடியாது,” என்று அவன் திகைத்துக் கூறினான்.
“நீ செய்யவேண்டும்,” என்று ஆதிரன் தெளிவாகக் கூறினான். “நீ இங்கு இருப்பதே நிழலாரை நேரடியாக இந்தக் கிராமத்திற்கு அழைப்பது போல.”
ஈமரன் கைப்பிடியில் இருந்த வேலி மரத்தை முறுக்கினான். நரம்புகள் புடைத்தன.
“எனக்கு எதுவும் தெரியவில்லை,” என்றான். “காவலர்களை எங்கே தேடுவது எனக்குத் தெரியாது. இந்த வெப்பம் என்ன என்று தெரியாது. கருங்கல் தூண் என்னை ஏன் தேர்ந்தெடுத்தது என்பதும் தெரியாது.”
ஆதிரன் அருகில் வந்து நின்றான். முதன்முறை, அவன் கண்களில் ஒரு மெலிந்த சோகம் தோன்றியது.
“எல்லாம் தெரிந்து கொண்டு எந்த ஒரு பயணமும் தொடங்காது, ஈமரா. உன் பயமே உனக்கு இப்பொழுது வழிகாட்டும்.”
ஈமரனின் கண்களில் நீர் கசிந்தது.
அவன் இந்த எல்லாவற்றையும் வெறுத்தான்—
சின்னவனாகத் தன்னை உணர வைக்கும் விதியை,
தன் விருப்பமின்றி இழுத்துச் செல்லும் இந்த புதிய பயணத்தை.
ஆனால் மார்புக்குள், கருங்கல் விட்டுச் சென்ற அந்த வெப்பத்தின் ஆழத்தில், ஒரு அமைதியான உணர்வு மேல் எழுந்தது—
அவன் ஏற்கனவே தெரிந்துகொண்டிருந்தான்: தான் கிளம்பாமல் இருக்க முடியாது என்று.
கருங்கல் தூண் முதல் முறையாக அவன் பெயரை அழைத்த அந்த நொடியிலேயே, தனது வாழ்க்கை இங்கே முடிவடையும் என்று அனுமானித்திருந்தான்.
ஆதிரன் அவன் தோளில் கையை வைத்தான். “இன்று ஒரு நாள் தான் உனக்கு இருக்கிறது,” என்றான். “உன்னை முழுதாய் பயணத்திற்கு தயார்படுத்திக் கொள். யாரிடம் எல்லாம் விடைபெறுவேண்டுமோ எல்லோரிடமும் சொல்லி தயாராகிவிடு. காலை புலரும்போது நான் திரும்பி வருகிறேன். அப்பொழுது நாமிருவர் வடக்குத் நோக்கி தொலைந்த பாதையை கண்டுபிடித்து பயணத்தை தொடங்குவோம்.”
ஈமரன் நடுங்கியபடி அவனைப் பார்த்தான். “நான் வரவில்லை என்றால்?”
ஆதிரனின் முகத்தில் ஒரு மங்கலான, சோர்வான புன்னகை தோன்றியது. அது மகிழ்ச்சி புன்னகை அல்ல.
“அப்படியென்றால்,” என்றவன் சிறிது நொடி அமைதியாய் இருந்து விட்டு , “மெய்யர்கள் உன்னைத் தேடி வருவார்கள்.”
அந்த இரவு, ஈமரன் வீட்டின் முன் இருந்த புல்வெளியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிராமம் முழுவதும் தூங்கிக் கொண்டு இருந்தது; அவர்கள் வாழ்வின் அமைதியை உடைக்கப்போகும் புயல் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
வானில் நட்சத்திரங்கள் மெதுவாக ஒளிர்ந்தன. தூர வடக்கில், சிவப்பு நிறம் இதயத் துடிப்பு போல் துடித்துக் கொண்டிருந்தது.
ஈமரன் கையை மார்பில் வைத்தான்; அங்கே இருந்த வெப்பம் அதே துடிப்புடன் பதிலளித்தது.
நாளை அவன் ஒரு தேர்வு செய்ய வேண்டும்— ஆனால் எங்கோ உள்ளிருந்து,
அந்தத் தேர்வு ஏற்கனவே முடிவாகி விட்டதுபோலவே உணர்ந்தான்.
“நான் தயார் இல்லை…” என்று இருளை நோக்கி மெதுவாகச் சொன்னான்.
“ஆனால் … நான் வருகிறேன்.”
குமரிக்குன்றத்தின் திசை நோக்கி வீசும் காற்றில்
ஒரு மெல்லிய, கிட்டத்தட்ட கேட்கமுடியாத பதில் வந்தது போல இருந்தது—
“நல்லது.”
