0

அத்தியாயம் 2 — அணையாத வெப்பம்

குமரிக்குன்றத்திலிருந்து இறங்கும் போது ஈமரனின் நடையில், ஒரு கனவின் மிச்சம் இன்னும் கண்களில் வழிந்து ஓடியது. கீழே அரவான் கிராமம் வழக்கம்போல அமைதியில் மூழ்கி இருந்தது — சுவர்களிலிருந்து எழும் புகை, கிணற்றருகில் யாரோ சிரிக்கும் சத்தம், நாய்களின் பரபரப்பு — எதுவும் மாற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் ஈமரனுக்குள் மட்டும் ஏதோ மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

அவன் மார்பின் பின்னால், எலும்புகளுக்குள், ஒரு வெப்பக்கரி ஒளிந்து கொண்டது போல உணர்ந்தான். அது எந்த ஒரு வலியையும் அளிக்கவில்லை; ஆனால் அதன் தீப்பொறி ஒருபோதும் அணையவில்லை.

துடிப்பு…
வெப்பம்…
துடிப்பு…
வெப்பம்…

என ஒவ்வொரு இதயத் துடிப்போடும் அந்த மர்மக் கல் அவனுடன் பேசுவது  போல் இருந்தது அவனுக்கு.

“நிழலார் எழுகின்றனர்… காவலர்களைத் தேடு… மறைந்தோரைக் எழுப்பு…”

குமரிக்குன்றத்தின் கருங்கல் கூறிய அந்தச் சொற்கள் அவனுடைய நினைவில் மட்டுமல்ல — அவனின் இரத்தத்துக்குள்ளேயே ஒட்டிக்கொண்டிருந்தன.

கிராமத்தின் நுழைவு பாதையில், பறவைகளுக்கு தானியமிட்டுக் கொண்டிருந்த முதிய மேறா, அவனைப் பார்த்ததும் சிரித்தாள்.

குமரிக்குன்றம் அத்தியாயம் 2 – ஈமரன் மார்புக்குள் அணையாத வெப்பம் விழித்தெழும் தருணம்
உலகம் இன்னும் மாறவில்லை… ஆனால் ஒருவன் மாற ஆரம்பித்துவிட்டான்.

“குமரிக்குன்றத்தில் இருந்து இவ்வளவு விரைவிலே திரும்பிவிட்டாயா, ஈமரா?”
அவள் பேச்சில் எப்போதும் இருந்த நகைச்சுவை ஒலித்தது. “அங்கிருக்கிற கருங்கல்லோட உக்காந்திருந்தா, அந்த கல்லு பேசுமாமே! அப்படியா…”

ஈமரன் ஒரு சின்ன புன்னகை செய்தான். “கற்கள் அதிகம் பேசாது, மேறா.”

“சரி.  இங்க அப்படி தான் பேசிக்கிட்டாங்க…” அவள் சிரித்தபடி மீண்டும் தன் வேலைக்கு திரும்பினாள்.

ஈமரன் நடக்கத் தொடங்கியபோது அவனின் புன்னகை கண்களில் இருந்த பெரும் அச்சத்தோடு சேர்ந்து மறைந்தது.

அவனது வீடு வயல் வரப்புகளின் அருகில் இருந்தது அதில் எப்பொழுதும் ஏதாவது ஒரு மராமத்து வேலை செய்ய வேண்டியதாக இருந்தது. அவனது தாய் உள்ளே எதையோ அம்மிக்கல்லில் அரைத்துக் கொண்டிருந்தாள்; புதிய கூழின் வாசம் வீட்டின் வெற்றிடம் முழுவதையும் நிரப்பியது.

“இவ்வளவு சீக்கிரமா வந்துட்டியா?” என்று கேட்டாள். “குமரிக்குன்றமே கதின்னு இருப்ப!”

ஈமரன் ஒரு நொடி எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்கின்ற மனநிலைக்கு வந்தான்.

கருங்கல் ஒளிர்ந்தது…
மண் அதிர்ந்தது…
அவனது பெயர் அழைக்கப்பட்டது…
வடக்கே சிவந்த வானம் துடித்தது…

ஆனால் அவன் வாய் திறந்ததும் ஒரு அச்சம் எழுந்தது.

அவள் நம்ப மாட்டாளா?
அல்லது நம்பிவிட்டால் அஞ்சி விடுவாளா?
கிராமம் என்ன முடிவெடுக்கும்?

அவன் மெதுவாகச் சொன்னான்:
“காற்று மாறுது போல இருக்கிறது… மழை வரும் போல.”

அவள் வெளியில் பார்த்தாள் — வானம் தெளிவாக இருந்தது.
“சரி, வானத்தை விடு,  நீ தான் எல்லாத்தையும் கணிச்சுருவியே?” என்று சிரித்தாள்.
“சரி, கை கழுவி வா. காலை உணவு ரெடி.”

ஈமரன் வெளியே வந்து தண்ணீர் குடுவையருகில் முகத்தைக் கழுவினான்.
குளிர்ந்த தண்ணீர் கன்னத்தில் பட்டதும் அவன் மனம் சிறிது தெளிந்தது.

ஆனால் அவன் மார்புக்குள் இருந்தது அணையாத வெப்பம் மட்டும் அமைதி கொள்ளவில்லை.

அவன் தண்ணீரில் தன் பிரதிபலிப்பைப் பார்த்தான்.
இருண்ட முடி…
சிறுகோண முகம்…
அவனுக்கே பழக்கமான முகம்.

ஆனால் —
ஒரு நொடிக்கு —
அவன் கண்கள் மெல்ல ஆரஞ்சு ஒளி வீசியது.

ஈமரன் திடுக்கிட்டான்.  குடுவையை கையில் இருந்து விடுவித்தான்.
தண்ணீர் அலைந்தது; அலை அடங்கியதும் அவன் முகம் வழக்கம்போல இருந்தது.

“என்ன நடந்திருக்கிறது எனக்கு?” அவன் தன்னைத்தானே கேட்டான்.

அன்றைய நாள் முழுவதும், அவன் சாதாரணமாக நடக்க முயன்றான்.

அம்மாவுக்கு துணி உலர வைக்க உதவினான். மருத்துவப் பெட்டகத்திற்காக சில மூலிகைக் கீரை வாங்கித் தந்தான். வீட்டின் முன் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றினான். ஆனால் ஒவ்வொரு வேலைக்கும் நடுவில் மர்மங்கள் அவனைத் தொடர்ந்து வந்தன.

கட்டையைக் தொட்டபோது, மண்தரையில் ஒரு மெல்லிய அதிர்வு. வானத்தைப் பார்த்தபோது, ஒரு நொடிக்கு மூன்று சின்னங்கள் — கிரீடம்… பாம்பு… உடைந்த நட்சத்திரம் — மின்னியது போல இருந்தது.

பழைய கிணற்றருகில் நடந்தபோது, சத்தமில்லாத ஒரு குரல், அவனைத் தேடி வந்தது போல உணர்ந்தான்.

அவன் தலையில் வலி எழுந்தது.

மாலை நேரம் அவன் வயல்களுக்கு அருகில் சென்றான். “நிலம் எப்படி இருக்கிறது” என்று தனியாக பேசிக் கொண்டான். கிராமத்தவர்கள் அவனைப் பார்த்து பழகியவர்கள் — ஈமரன் எப்போதும் தனிமையில் நடப்பவன் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவன் கல்லின் பக்கத்தில் அமர்ந்து, குமரிக்குன்றத்தை பார்த்தான்.

தூரத்தில், கருங்கல் தூண் ஒரு மெல்லிய கோடு போல மட்டுமே தெரிந்தது.
அது அன்றைய காலை அவனது விதியை மாற்றியது, என்பது அங்கு யாருக்கும் தெரியாது.

“நான் அதை மீண்டும் தொடக்கூடாது,” அவன் தன் மனதில் சொன்னான்.

அவனது மார்பில் இருந்த வெப்பம் — அதற்கு மறுப்பு சொல்வது போல மெல்ல பளிச்சென்று துடித்தது. 

அன்றிரவு அவனுக்கு நித்திரை வரவே இல்லை.

அவன் கண்ணை மூடி படுத்தபடி , தன் தாயின் சுவாச சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தான். வெளியில் கிராமம் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது.

துடிப்பு…
வெப்பம்…
துடிப்பு…
வெப்பம்…

அவன் கண்களை மூடியதும், கனவு அலைகளாக வந்தது.

அவன் மீண்டும் குமரிக்குன்றத்தின் உச்சியில் இருந்தான் —
ஆனால் இந்த முறை
அரவான் காணாமல் போனது.
வயல்கள் இல்லை.
முழுவதும் கருங்கல் தூண்கள்  — பிளவுகள், புகை, சாம்பல்.

அவன் முன் இருந்தது அதே கருங்கல் தூண் தான் — ஆனால் இப்போது வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது. மூன்று சின்னங்கள், எரியூட்டப்பட்ட தீபோல் ஒளிர்ந்தன.

“ஈமரன்.”

குரல் இடி போல இல்லாமல் அவன் காதருகே மெதுவாக இருந்தது.

அவன் திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை.

பின்னர் நிலம் பிளந்தது. அந்த பிளவுகளுக்குள் அரக்க வடிவங்கள் மெல்ல எழும்பி  வருவது போலத் தோன்றின.

“காவலர்களைக் கண்டுபிடி… மறைந்தோரை எழுப்பு…”

“எப்படி?” ஈமரன் கத்தினான். “நான் ஒரு சாதாரண கிராமத்துப்பையன் தான்!”

அவனது மார்பின் வெப்பம் தீ போல எரிந்தது. அவன் உடம்பு நடுங்கியது.

கருங்கல் தூணின் ஒளி அவனை முழுவதுமாகக் கவ்வி கொண்டது. அது ஒரு நிழல் உருவத்தை காட்டியது — கல்லின் உள்ளே சிக்கியிருந்த ஒரு பெயரற்ற உருவம்.

“அப்படிச் செய்ய கற்றுக்கொள்… இல்லையெனில் வேள்நாடு நிழலின் இருளில் விழும்.”

நிலம் அவன் காலடியில் பிளந்தது, அவன் இருளுக்குள் விழுந்தான்.

ஈமரன் திடீரென எழுந்தான். முழு உடலும் வியர்வையில் நனைந்திருந்தது.
அவனது மார்பில் இருந்த வெப்பம், இப்போது கூர்மையான சக்தியாக இருந்தது.

வெளியில் கிராமம் மிக அமைதியாக இருந்தது. ஆனால் ஈமரனுக்கு தெரிந்தது —
அவன் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று.

அவன் கண்களை மூடினான், ஒரு விடயம் மட்டும் மனதில் நிறைந்தது:

வடக்கு.

அந்த சிவந்த வானம்.
அந்த துடிப்பு.
அந்த அழைப்பு.

காவலர்கள் அங்கே.
நிழலார் அங்கே.
அவனது விதி — அங்கே.

ஈமரன் மெதுவாகச் சொன்னான்:

“என்னால் இதைத் தவிர்க்க முடியாது…”

மற்றவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் குமரிக்குன்றத்தின் அழைப்பு இன்றிரவு அவனது இதயத்தில் ஒரு நிமிடமும் நீங்காமல் அலைக்கழித்தது.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!