வேள்நாடு எவ்வளவு தொன்மையானது என்று அதன் பாறைகளுக்கே நினைவிருக்காது. பருவமழைகளின் ஆவேசமும், ஆதிக்காற்றின் இசையும், மறைந்து போன இனங்களின் காலடிச் சுவடும் அந்த நிலத்தின் வடிவத்தை ஆயிரம் முறை மாற்றியிருந்தாலும், அதன் நெடுங்கதை அரவான் என்ற சின்ன கிராமத்தை ஒருபோதும் தொட்டதில்லை.
அரவான் மக்கள் எளிமையான வாழ்வில் ஆழ்ந்து கிடந்தவர்கள். பரிதியின் முதல் ஒளியோடு எழுந்து, நிலவின் மென்மையான நிழலில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிடும் வாழ்க்கை. அவர்களின் நாட்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நிகழ்வின் பிரதிபலிப்பை போல அமைதியில் கரைந்தன. இருள், அதிசயம், மாயம்— என்று எதுவும் அமைதியின் மடியில் உறங்கி கொண்டிருக்கும் இந்த கிராமத்தை தொல்லை செய்யவில்லை.
ஆனால் அந்த மாறாத அமைதியின் மேல் முதல் தாக்கம் எழுந்தது ஈமரன் அந்தக் காலை வேளையில் குமரிக்குன்றத்தை ஏறிச் சென்ற தருணத்தில் தான்.
பதினாறு வயது இளைஞன் ஈமரன்—மெளனத்தை ரசிப்பவன், பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தம் கொண்டவன். மற்ற இளைஞர்கள் நதிக்கரையில் சத்தமிட்டுச் சிரித்தபடி விளையாடும் நேரங்களில், அவன் தனக்கே உரிய பாதையைத் தேர்ந்து எடுப்பான். அவனை ஈர்த்தது குமரிக்குன்றம்—ஒரு மர்மக் குன்றம்; சிலருக்கு அச்சத்தையும், சிலருக்கு புனிதத்தை நினைவூட்டும் அந்த இடம்.

அரவான் மக்கள் அந்தக் குன்றைத் தவிர்ப்பார்கள். சில இரவுகளில் காற்று அங்கே மனித குரல் போல் முணுமுணுக்குமாம்; சில சமயங்களில் நிலமே சிறிது நடுங்கி, அதன் அடியில் புதைந்து கிடக்கும் வேறொரு உலகம் மேல் எழ முயற்சிக்கும் . “அங்குச் சக்திகள் வாழ்கின்றன,” என்று முதியவர்கள் எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் ஈமரனுக்கு அது எந்த விதத்திலும் அச்சத்தை கொடுத்தது கிடையாது; அவன் மனம் அவனை அறியாமல் ஏதோ ஒரு அழைப்புக்கு கட்டுப்பட்டது.
அன்று காலையில் வசந்த காலத்தின் தென்றலில் ஏதோ சுகந்தம் இல்லை. காற்று ஏதோ சொல்ல முயல்வது போலக் வெகுவாக குளிர்ந்தது. பறவைகளும் தங்களுக்கு உரிய வழக்கமான மொழியில் பல குரல்களில் அச்சமூட்டும் சப்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தன. சாம்பல் மேலங்கியை இறுக்கிக் கட்டியபடி, ஈமரன் குமரிக்குன்றத்தின் மேடு வழியே ஏறினான்.
மலையின் உச்சியில் ஒரு பெரிய கருங்கல் தூண் நின்றிருந்தது—
இரண்டு ஆள் உயரத்திற்கு அது உயர்ந்து இருந்தது,
எவ்வளவு நாட்களாக அது நடப்பட்டு இருக்கிறது என்று அறியமுடியவில்லை. அதன் வயதை அடையாளம் காண முடியாத ஒன்றாய் இருந்தது.
அதை யார் வைத்தார்கள்? எப்போது வைத்தார்கள்?
வேள்நாட்டில் புழங்கும் எந்தப் பழங்கதைகளிலும் அதற்கு பதில் இல்லை.
ஊர் மக்கள் தொட்டுப் பார்க்காத அந்தக் கருங்கல் தூணை ஈமரன் பார்க்கவேண்டும் என்று எதுவோ ஒன்று உந்தித் தள்ளியது. அதன் அருகே சென்றான் மனத்தில் அமைதி கரைந்து ஏதோ அச்சம் உருவாகியது.
என்றும் இல்லாமல் இன்று அவன் கையை நீட்டி கருங்கல் தூணை தொட்டான்.
அந்த நொடியில் உலகமே மூச்சை நிறுத்தியது போல இருந்தது.
அதுவரை குளிராய் இருந்த கருங்கல் தூண்—
திடீர் என்று வெப்பமயமானது.
உயிரின் துடிப்பை உணரும் வெப்பம்.
ஈமரன் அதிர்ச்சியில் கையைப் பின்வாங்கியதும், மண்ணின் அடிவயிற்றிலிருந்து ஒரு முழக்கம் எழுந்தது—மக்கள் கேட்க முடியாத அளவு மிக ஆழ்ந்த, மிகப் பழமையான ஒலி.
அடுத்த நொடியில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டது—
“ஈமரா…”
அவனைச் சுற்றிலும் யாரும் இல்லை.
காற்று கூட அசையவில்லை.
குரல் கருங்கல் தூணில் இருந்து வெளிவந்து.
“தொடங்குகிறது…” என்றது அந்தக் குரல் மீண்டும்.
ஈமரனின் காலடியில் இருந்த மண்தரை மெதுவாக அதிர்ந்தது.
வடக்கே தூரத்தில், மலைச்சரிவுகளுக்கு அப்பால்,
சிவப்பு ஒளி ஒரு இதயத்துடிப்பு போலத் துடித்தது.
அது தீ அல்ல; உயிரின் அறிகுறி.
அதே நேரத்தில் கருங்கல் தூண் ஒளிர ஆரம்பித்தது.
அதன் மேற்பரப்பில் மூன்று சின்னங்கள் தோன்றின—
கிரீடம்.
பாம்பு.
உடைந்த நட்சத்திரம்.
அந்த ஒளியின் சீற்றத்தில் காற்று புயல்போல் எழுந்தது.
ஈமரன் தன் நிலையை காத்துக்கொள்ள முயன்றான்.
ஒளி அவன் மார்பை நோக்கி பாய்ந்தது;
வெப்பம் அவனுக்குள் ஊடுருவியது.
பின்னர் வந்த குரல்—
அச்சமும் அதிகாரமும் கலந்து—
தெளிவாகக் கூறியது:
“நிழலார் எழுகின்றனர்.
காவலர்களைத் தேடு.
மறைந்தவர்களை எழுப்பு.”
ஒரே கணத்தில் ஒளி மறைந்தது.
கருங்கல் தூண் மீண்டும் பனிக்கல்லைப் போல குளிர்ந்தது.
ஒரு கணத்தில் அந்த இடம் எதுவும் நிகழாதது போல பழைய நிலைக்கு மாறியது.
ஆனால் ஈமரனுக்குள்—
ஏதோ பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது.
அவன் கைகளில் இன்னும் வெப்பம் உணரமுடிந்தது.
அது உள்ளங்கைகளுக்குள் ஓடி,
நரம்புகளின் வழியாகச் பெரும் சக்தியை பாய்ச்சியது.
வேகவேகமாக அந்த இடத்தில் இருந்து இறங்கிய ஈமரன் குமரிக்குன்றத்தை திருப்பிப் பார்த்தான். அங்கே இருந்த கருங்கல் தூண், இப்பொழுது ஒரு கறுப்பு கோடு போல மட்டுமே தெரிந்தது— ஆனால் அது இன்று அவனது விதியை முற்றிலும் மாற்றி எழுத தொடங்கிவிட்டது.
அவன் தன் மார்பில் வெப்பத்தை உணர்ந்தபடி மெதுவாகக் கேட்டான்—
“ஏன் நான்?”
காற்று பதில் அளிக்கவில்லை. ஆனால் விதி அந்தக் கேள்வியை கேட்டு சிரித்தது.
அன்றே ஈமரனின் பயணம் தொடங்கியது— அது வேள்நாட்டின் வரலாற்றை மாற்றப்போகும் குமரிக்குன்றத்தின் பெருங்காவியம்..
