0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை

கூட்டம் கலைந்த நேரம், பரிதியின் ஒளி மெதுவாகக் மங்கத் தொடங்கி அரவான் கிராமத்தின் மேலே மெல்லிய போர்வை போலப் படிந்திருந்தது. பரிதியின் கிரணங்கள் வலு இழந்து அதன் நீளமான நிழல்கள், ஊர்மையத்தில் நின்ற மனிதர்களின் காலடிகளைச் சுற்றிக் கொண்டு அதை விட மனமில்லாதவாறு நெருக்கிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.

கிராமவாசிகள் சிறு சிறு குழுக்களாக, ஒழுங்கற்ற முறையில் மண்டபத்திலிருந்து வெளியேறினர். மெல்லிய குரல்களில் யாருக்கும் காதில் விழுந்துவிடக் கூடாது என்பதுபோல் அக்கம் பக்கம் பார்த்தபடி பேசிக் கொண்டே வெளியேறினர். எவருடைய கண்களும் மரங்களுக்கு அப்பால் மறைந்திருந்த குமரிக்குன்றத்தை கவனம் தவறியும் பார்க்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே எதை எதையோ முணுமுணுத்தபடி அவர்களது முணுமுணுப்பே கவசம் போல யாரையும் திரும்பப் பார்க்காமல் இடத்தை காலி செய்தனர்.

குமரிக்குன்றம் - அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை

ஈமரன் மட்டும் கடைசியாக வெளியே வந்தான். காற்று, காலையில் இருந்ததைப் போல இல்லை. அந்த விசித்திரமான வாசனை சற்று தணிந்திருந்தது. ஆனால் மார்புக்குள் இருந்த அந்தச் சுடர் மெதுவாக அசைய ஆரம்பித்தது. அதனிடம் எந்த அவசரமும் இல்லை, எந்த ஒரு தீவிரமும் தெரியவில்லை; ஆனால் திடமாக ஒரு அழுத்தம், ஒட்டுமொத்த மனித இனமே சேர்ந்து அவன் மார்பைத் தட்டுவது போல ஒரு அதிர்வு.

இது தான் அந்த நொடி
என்று அது சொல்லாமல் சொன்னது.

ஊர்மையத்தின் ஓரத்தில் நின்றபடி, மூத்தோர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டான். மாயரனின் குரல் ஒரு சில துணுக்குகளாகக் காற்றில் வந்து விழுந்தது.

“…ஆதாரம் இல்லை…”
“…அச்சம் பரவுகிறது…”
“…தலைமுறைகளாக அந்தக் குமரிக்குன்றத்தின் அருகிலேயே வாழ்ந்திருக்கிறோம்…”

ஈமரன் கையை இறுக்கினான்.

ஆதாரம்.

துணிவை இழக்கும் முன், அவன் முன்னேறினான்.

“மூத்தோர் மாயரன்,” என்றான்.

பேச்சு நிறுத்தப்பட்டது.

மாயரன் மெதுவாகத் திரும்பினார். முகம் அமைதியாக இருந்தது; முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்ட திருப்தியான முகம்.
“சொல், ஈமரா.”

மார்புக்குள் இருந்த வெப்பம் அவனது மார்பு மற்றும் கைகளின் வழியே பின்னிப் பரவியது. வலியில்லை; ஆனால் அவனது மொத்த கவனத்தையும் அது ஈர்த்தது. உலர்ந்த தொண்டையை ஈமரன் எச்சில் மூலம் விழுங்கிக் கொண்டான்.

“எதுவும் இன்னும் முடியவில்லை,” என்றான்.
“நேற்றிரவு நடந்தது… இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.”

அருகிலிருந்தவர்களிடையே முணுமுணுப்பு அதிகரித்தது.

“இரவு கடந்துவிட்டது,” என்றார் மாயரன்.
“இப்போது வானம் தெளிவாகத்தான் இருக்கிறது.”

“இப்போதைக்கு,” என்றான் ஈமரன்.
“ஆனால் குன்றம்—”

“இன்று குன்றத்தைப் பற்றி பேச மாட்டோம்,” என்று மாயரன் உறுதியாகக் கூறினார்.
“மக்களுக்கு ஓய்வு தேவை. செய்ய வேண்டிய அன்றாட வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன…” என்று அதிகமாய் இழுத்தார்.

“அது பேசிவிட்டது,” என்றான் ஈமரன். அந்தச் சொல்லே இடையில் கனமாக விழுந்தது.
“கருங்கல்… தூண், அது எச்சரித்தது—”

மாயரனின் கண்கள் கூர்மையடைந்தன.

“போதும்.”

ஈமரன் பெருத்த மூச்சை வெளியிட்டான். அவன் மார்புக்குள் இருந்த சுடர் ஒளிர்ந்தது— மாயரனின் மீது அவனுக்கு எந்த கோபமும் எழவில்லை; ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது… அவசரம். நேரமே அவனை நெறுக்கியது.

“நிழலார் எழுந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று ஈமரன் இப்போது உரக்கச் சொன்னான். “நான் கற்பனை செய்யவில்லை. காவலர்கள் விழிக்க வேண்டும் என்று அது சொன்னது—”

“அமைதி,” என்றார் மாயரன்.
இம்முறை அது வேண்டுகோளாக இல்லை.

அரவான் கிராமமே இறுகியது போல இருந்தது.

“நீ பயந்திருக்கிறாய்,” என்றார் மூத்தோர் மாயரன்.
“பயம் தேவையற்ற உணர்வுகளை உருவாக்கிவிடும். ஒரு சிறுவன் கருங்கல் தூணைத் தொட்டதால் நாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். எந்த விதப் பதற்றத்தையும் நாம் விதைக்கக் கூடாது.”

ஈமரன் சுற்றிப் பார்த்தான்.

சில கிராமவாசிகள் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் தவறாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவன் தவறாக இருக்க வேண்டும் என்பதே அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.

ஈமரன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால், நிழலார் இங்கே வரும். நாம் கண்டும் கேட்டும் ஒன்றும் செய்யவில்லை என்பதால் குமரிக்குன்றம் அமைதியாக இருக்காது.”

மாயரன் அவனை நீண்ட நேரம் பார்த்தார்.

“குமரிக்குன்றம் நமது ஆதி சக்தி உறங்கும் இடம். நாம் எப்போது கேட்கக் கூடாது என்பதை நாம் தெளிவாக அறிந்ததால் தான் இந்தக் கிராமம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது,” என்றார் அவர்.

அந்த வார்த்தைகள் எந்தக் கண்டிப்பையும் விட ஆழமாகப் பாய்ந்தன.

சுடர் சற்று மங்கியது— ஆனால் அடங்கவில்லை. நிலைத்து நின்றதைப் போல ஒரு உணர்வு எழுந்தது; ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றை அது இப்போது உறுதி செய்தது போல இருந்தது.

“சொல்ல வேண்டிய விடயங்களை நான் சொல்லிவிட்டேன்,” என்றார் மாயரன்.
“இந்த விடயம் இத்துடன் முடிந்தது. அனைவரும் போய் அன்றாட வேலைகளை செய்யுங்கள்,” என்று யாரிடமும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தார்.

கிராம மூத்தோர்கள் அனைவரும் இறுகிய முகத்துடன் கலைய ஆரம்பித்தனர்.

ஈமரன் எந்த திசையில் செல்கிறோம் என்று தெரியாமல் எல்லா தெருக்களிலும் நடந்தான். மாலைச் நேரச் சத்தங்கள் மெதுவாக அடங்க ஆரம்பித்தன. இரவு உணவுக்காக அடுப்புகளில் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. எல்லா வீட்டுக் கதவுகளும் வழக்கத்தை விட சீக்கிரமே மூடப்பட்டன. எங்கோ ஒரு குழந்தை அழுதது; பின்னர் அந்தச் சத்தம் கேட்கவில்லை.

அந்தக் கிராமமே தன்னைத் தயார் செய்துகொண்டது— மாற்றத்திற்கு முகம் கொடுக்காமல் அதற்கு எதிராக நடக்க ஆரம்பித்தது.

அரவானின் எல்லையில், வயல்கள் மரங்களை நோக்கித் தாழும் இடத்தில், ஈமரன் நின்றான்.

குமரிக்குன்றம் அப்பால் இருந்தது— பார்க்க முடியாவிட்டாலும், உணராமல் இருக்க முடியாத ஒன்று. இப்போது தூரமே ஒரு மாயை போல. மார்புக்குள் இருந்த சுடர் அதற்கு பதிலளித்தது.

ஆதிரனின் குரல் நினைவில் ஒலித்தது.

இன்று குமரிக்குன்றத்துக்குப் போகாதே.

ஈமரன் மெதுவாக மூச்சை விட்டான்.

“நான் முயன்றேன்,” என்று முணுமுணுத்தான்— யாரிடம் பேசுகிறான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.

அப்போது பின்னால் காலடி சத்தம். ஈமரனின் தாய் இருண்டுகொண்டு வரும் வானத்தை நோக்கிப் படியே அவனருகே நின்றாள். மண்டபத்தில் என்ன பேசப்பட்டது என்று அவள் கேட்கவில்லை.

“அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்,” என்றாள்.

“ஆம்.”

“நீ?”

ஈமரன் தயங்கினான். பதில் ஏற்கெனவே உருவெடுத்திருந்தது— மிக வலியதும் உறுதியானதுமாக இருந்தது.

“நான் தங்க முடியாது அம்மா,” என்றான்.

அவள் அவன் மேலங்கியின் ஓரத்தைப் பிடித்தாள்— அவளுக்கு அவன் படும் துயரம் தெளிவாகத் தெரிந்தது.
“எனக்குத் தெரியும்,” என்று மிக மெதுவாகச் சொன்னாள்.

அவன் அவளைப் பார்த்தான். உணர்வுகளை உலுக்கிய உள்ளத்துடன் உண்மையாகப் பார்த்தான். அவன் மனம் முழுக்க பயம் நிறைத்திருந்தது— பயம் குமரிக்குன்றத்தின் மேல் அல்ல, அரக்கத்தனமாய் தோன்றி மறைந்த வானத்தின் மேலும் அல்ல; இழப்பின் பயம்.

“நான் எதைக் நோக்கி நடக்கிறேன் என்று தெரியவில்லை,” என்றான்.

“யாருக்குத் தான் தெரியும் ஈமரா,” என்றாள் அவள்.
“ஆனால் எதிலிருந்து விலகுகிறோம் என்பது உனக்கு தெளிவாய் தெரியும்.”

சுடர் மீண்டும் வெப்பமடைந்தது— மிக மிகப் பொறுமையாக.

வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றத் தொடங்கிய போது— மிகவும் மங்கலாகவும், வெகு தூரத்தில் சின்னப் புள்ளியாகத் தெரிய ஆரம்பித்தது— ஈமரன் வீட்டுக்குத் திரும்பினான். அமைதியாகப் பயணத்திற்கான பொருட்களைச் சேர்த்தான். சேகரித்த பொருட்களை ஒரு புறத் தோளில் சுமந்த படி நடக்க ஆரம்பித்தான். மனதிற்குள் எதுவும் தன்னை மந்தப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே ஓடியது.

வடக்குப் பாதையில் கால் வைத்தபோது, மண்தரை சற்று வேறுபட்டுத் தெரிந்தது; ஏதோ எச்சரிக்கை செய்வது போல இருந்தது அவனுக்கு.

பின்னால், அரவான் அமைதியாக இரவுக்குள் மூழ்கியது— மூடிய கதவுகளும், கொடுக்கப்பட்ட பொய்யான ஆறுதல்களுடன் கிராமவாசிகள் உறங்கச் சென்றனர்.

ஈமரனுக்கு முன்னால், குமரிக்குன்றம் காத்திருந்தது.

எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால், அமைதி தொலைவதை யாராலும் தடுக்க முடியாது.

உண்மையில் சில பயணங்கள் நம்பிக்கையுடன் தொடங்கப்படுவதில்லை;
தங்குவதை விட, புறப்படுவது தன் கிராமத்தை காப்பாற்றும் என்று ஈமரன் உணர்ந்த தருணம் தான் இந்தப் பயணம் தொடங்கியது.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!